அபுதாபி : ஹைதராபாத் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் தொடர் சொதப்பல்கள் மூலம் பெங்களூரு அணி மோசமான தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இத்துடன் வெற்றிகரமாக தொடர்ந்து ஐந்தாவது தோல்வியை பதிவு செய்துள்ளது பெங்களூரு அணி.
2020 ஐபிஎல் தொடரின் முதல் எலிமினேட்டர் சுற்று போட்டி நேற்று அபுதாபியில் இருக்கும் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளிகள் பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி இந்த போட்டியிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் எனும் கட்டாயம். ஆனால் பெங்களூரு அணியின் பிளெயிங் லெவன் இன்று அதிர்ச்சி கொடுத்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் கோலி தொடக்க வீரராக களமிறங்கி ஆச்சர்யம் கொடுத்தார். அப்போதே ரசிகர்கள் முக்கியமான போட்டியில் சோதனை முயற்சி எல்லாம் தேவை தானா என்றும் கேள்வி எழுப்பினர். எதிர்பார்த்தது போலவே கேப்டன் கோலி 6 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். படிக்கல் ஒரு ரன்களில் வெளியேற பின்ச் மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி ஓரளவு பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ஆனால் பின்ச் 32 ரன்களில் வெளியேற அடுத்து வந்த அணைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
நிலையாக விளையாடிக்கொண்டிருந்த ஏபி டி வில்லியர்ஸ் விக்கெட்டையும் தமிழக வீரர் நடராஜன் அதிரடியாக வீழ்த்தினார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. முக்கியமான போட்டியில் கூட ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சொதப்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. பின்ச், ஏபி டி வில்லியர்ஸ் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க எண்களை எட்டவில்லை. பின்னர் 132 என்கிற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியும் முதலில் தடுமாறினாலும் அதன் பின்னர் கேன் வில்லியம்சன் பொறுமையாக விளையாட ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டுமே பறிகொடுத்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பெங்களூரு அணி இந்த போட்டியோடு சேர்த்து இந்த சீசனில் மட்டும் தொடர்ந்து ஐந்தாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் ரசிகர்களும் விரக்தியில் உள்ளனர். பேட்டிங்கில் தான் மோசமாக விளையாடியது என்றால் பந்துவீச்சிலும் எதிரணியை அச்சுறுத்தும் வகையில் வலிமையான பவுலர்கள் யாரும் இல்லை என்பதும் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். இந்த சீசனிலும் ஈ சாலா கப் நம்தே என்கிற கோஷம் பெங்களூரு அணியினருக்கு கனவாகவே சென்றுவிட்டது. ஹைதராபாத் அணியை பொறுத்தவரை இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு அடுத்து டெல்லி அணியுடன் மொத வேண்டும், அதில் வெல்லும் அணியே இறுதி போட்டியில் மும்பையை எதிர்கொள்ளும்.