ஷார்ஜா : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியால் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் லீக் போட்டியோடு வெளியேறியுள்ளது. சென்னை அணிக்கு மீதம் 3 போட்டிகள் இருந்தாலும் அதனால் இனி எந்த பலனும் இல்லை.
சிஎஸ்கே இதுவரைக்கும் விளையாடியுள்ள எல்லா ஐபிஎல் தொடர்களிலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது கிடையாது. ஐபிஎல் தொடரில் தான் பங்கேற்ற அணைத்து சீசனிலும் ப்ளே ஆஃப் சென்ற ஒரே அணி சிஎஸ்கே மட்டும் தான். இந்த ஒரு காரணத்தினாலே கடைசி நொடியில் கூட எப்படியும் சென்னை அணி ஆச்சர்யம் கொடுக்கும் ப்ளே ஆஃப்க்கு முன்னேறிவிடும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் நேற்றைய போட்டியின் தோல்விக்கு பிறகு சென்னை மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்துவிட்டனர்.
ஷார்ஜாவில் நடைபெறும் போட்டி என்பதால் அதிக எடுக்கலாம், மும்பை அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்காத நிலையில் சிஎஸ்கேவுக்கு பெரிய வாய்ப்பு காத்திருந்தது. ஏற்கனவே மும்பையுடன் மோதிய போட்டியில் சென்னை வெற்றி பெற்றுள்ளதால் அதே உத்வேகத்துடன் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. நீண்ட சர்ச்சைகளுக்கு பின்னர் சென்னை அணியில் இளம் வீரர்கள் ருத்ராஜ், ஜெகதீசன் மற்றும் இம்ரான் தாஹிரும் இந்த போட்டியில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் இந்த தொடர் முழுவதுமே ஒரு நிலையான அணியை உருவாக்க முடியாமல் திணறி வந்த சிஎஸ்கே இந்த போட்டியிலும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டது விபரீத முடிவு என்பது போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தெரிந்துவிட்டது. சென்னையின் அணைத்து பேட்ஸ்மேன்களும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப 50 ரன்களுக்குள் முடிந்திருக்க வேண்டிய சிஎஸ்கேவின் நிலையை சாம் கரன் தனி ஆளாக போராடி 114 ரன்கள் வரை இழுத்து வந்தார். அதிக ரன்கள் எடுக்க கூடிய ஷார்ஜா மைதானம், முதல் பேட்டிங் இத்தனை இருந்தும் சாம் கரனும் இம்ரான் தாஹிரும் தான் சிஎஸ்கேவின் மானத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் உருவானது.
பின்னர் 115 என்கிற எளிதான இலக்குடன் ஆட தொடங்கிய மும்பை எந்த வித பாரபட்சமும் இன்றி பந்துவீச்சில் எப்படி சென்னை அணியை சரணடைய வைத்ததோ அதே போல பேட்டிங்கிலும் அதிரடி காட்டியது. இன்றைய போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றிபெற்றால் புள்ளிகள் பட்டியலில் அவர்களால் முதலிடத்தை பிடிக்க முடியும் என்பதால் தொடக்கம் முதலே மும்பை வீரர்கள் அதிரடியாக ஆடினர். மும்பை இந்தியன்ஸிடம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த சிஎஸ்கேவால் கடைசி வரை மும்பை அணியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை. குயின்டன் டி காக் 46 ரன்களும் இஷான் கிஷான் 68 ரன்களும் எடுக்க 12.2 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் 2020 ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறும் முதல் அணியாக சிஎஸ்கே மாறியுள்ளது. அதே நேரம் மும்பை இந்தியன்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். சிஎஸ்கே சூதாட்ட புகாரில் சிக்கி 2 ஆண்டுகள் தடையில் இருந்த போது கூட ரசிகர்கள் இவ்வளவு புலம்பியது இல்லை. முதல் முறையாக மோசமான தொடர் ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.