Monday, May 29, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்நாளை தொடங்குகிறது ப்ளே ஆஃப் போட்டிகள்.. மும்பை டெல்லி இடையே பலப்பரீட்சை

நாளை தொடங்குகிறது ப்ளே ஆஃப் போட்டிகள்.. மும்பை டெல்லி இடையே பலப்பரீட்சை

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்று போட்டிகள் நாளை தொடங்குகின்றன. துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் பெரும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களுக்கு இடையே ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனில் மட்டும் தான் கடைசி லீக் போட்டிகள் வரை எந்த அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்று கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தொடரின் முதல் பாதியில் அதிரடியாக விளையாடிய அணிகள் எல்லாம் இரண்டாம் பாதியில் தடுமாற தொடங்கின. முதல் பாதியில் தொடர் தோல்விகளை சந்தித்த அணிகள் இரண்டாம் பாதியில் சர்ப்ரைஸாக வெற்றி பெற்றன. இதனால் கடைசி இடத்தில் இருந்த பஞ்சாப் அணிக்கு கூட ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் சிஎஸ்கே அணிக்கு எதிரான தோல்வி பஞ்சாப் அணியின் வாய்ப்பை பறித்துவிட்டது. இதில் சென்னை அணி தான் முதலில் லீக் போட்டிகளோடு வெளியேறிய அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மும்பை அணி மட்டுமே முதலில் தகுதி பெற்று இருந்த நிலையில் பெங்களூர், டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இதில் டெல்லி கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றதால் இரண்டாவது அணியாக உள்ளே நுழைந்தது. ஹைதராபாத், பெங்களூர், கொல்கத்தா அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்று இருந்தாலும் வெறும் 0.5 நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் கொல்கத்தா ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் ப்ளே ஆஃப் சசுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. டெல்லி அணியை பொறுத்தவரை லீக் போட்டிகளின் கடைசி நேரத்தில் தடுமாறியது. அந்த அணிக்கு ஓப்பனிங் பேட்டிங் இன்னமும் சரியாக அமையவில்லை. பிரிதிவி ஷாவுக்கு பல வாய்ப்புகள் கொடுக்கப்படும் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். மேலும் தவான் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் தவிர மற்றவர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது கிடையாது. இதனால் டெல்லி அணி பேட்டிங் வரிசையை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மும்பை அணியை பொறுத்தவரை கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் வந்துள்ளது அந்த அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளது. ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் ஒய்வு கொடுக்கப்பட்ட பும்ரா மற்றும் போல்டும் நாளைய போட்டியில் களமிறக்கப்படுவர். ஆனால் அதே சமயம் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதனால் நாளைய போட்டி இரண்டு அணிகளுக்கு சவாலானதாக இருக்கும்.

நாளை நடைபெறும் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக பைனலுக்கு தகுதிபெறும். தோல்வி அடையும் அணி அடுத்து நடைபெற இருக்கும் ஹைதராபாத், பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெரும் அணியுடன் மீண்டும் மொத வேண்டும். அதில் வெற்றி பெரும் அணி பைனலுக்கு தகுதி பெரும். பைனல் நவம்பர் 10ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறும்.