அபுதாபி : பஞ்சாப் அணியின் அதிரடி நாயகன் க்றிஸ் கெயில் டி20 போட்டிகளில் 1000 சிக்ஸர்களை கடந்த வீரர் என்கிற இமாலய சாதனையை எட்டியுள்ளார். எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் நெருங்க முடியாத ஒரு மைல்கல்லை கெயில் அடைந்துள்ளார். ஆனாலும் இந்த சாதனையை எட்டிய அடுத்த பந்திலேயே கெயில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.
ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்த அணிகள் எல்லாம் தகுதி பெரும் என்பது இனமும் புதிராகவே உள்ளது. இந்த சீசனில் எல்லா அணியும் வலிமையானதாக மாறியுள்ளது. சிஎஸ்கே வரைக்கும் தொடர்ந்து இரண்டு போட்டிகளாக வெற்றி பெற்று காலம் போன நேரத்தில் கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுவது ஒவ்வொரு அணிக்கும் சவாலானதாகவே மாறியுள்ளது. இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பவுலிங் செய்ய திட்டமிட்டது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் மன்தீப் சிங் உடனே விக்கெட்டை பறிகொடுத்த பின்பு கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்த கெயில் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார். கெயில் இந்த சீசன் முழுவதுமே அதிரடியாக ஆடி வருகிறார். போன சீசனில் அதிக வாய்ப்பு கெயிலுக்கு கொடுக்கப்படவில்லை, இந்த சீசனிலும் தாமதமாகவே வாய்ப்பு கிடைத்தது இருப்பினும் அதை பயன்படுத்திக்கொண்ட க்றிஸ் கெயில் ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.
க்றிஸ் கெயில் நேற்றைய போட்டியில் மட்டுமே மொத்தம் 8 சிக்ஸர்கள் விளாசினார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்களை கடந்த ஒரே வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். தற்போதைய நிலையில் கெயிலின் இந்த சாதனையை வேறு எந்த வீரராலும் நிகழ்த்த முடியாது. இந்த பட்டியலில் கெயில் 410 போட்டிகளில் 1001 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பொல்லார்டு 524 போட்டிகளில் 690 சிக்ஸர்களும் மூன்றாவது இடத்தில் மெக்குல்லம் 370 போட்டிகளில் 485 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.
கெயில் ஆர்ச்சரின் ஓவரில் எடுத்த சிக்சரின் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய போது இந்த போட்டியில் 99 ரன்கள் எடுத்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஐபிஎல்லில் சதம் அடிக்க இன்னும் 1 ரன் தேவை என்கிற நிலையில் அடுத்த பந்திலேயே போல்டு ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார். ஆர்ச்சர் போட்ட யார்க்கர் பாலில் தடுமாறி விக்கெட்டை இழந்தார். இதனால் கடுப்பான கெயில் மைதானத்திலேயே பேட்டை தூக்கி வீசி கோபத்தை வெளிப்படுத்தினார். பின்னர் சக வீரர் மேக்ஸ்வெல் பேட்டை எடுத்து கொடுத்து ஆர்ச்சர் ஆறுதல் சொல்லவும் நிதானம் அடைந்து பெவிலியன் திரும்பினார்.
ஆனால் கெயிலின் அத்தனை முயற்சிகளும் இந்த போட்டியில் வீண் ஆனது. பஞ்சாப் அணி 20 ஓவரில் 185 ரன்கள் எடுத்தது. பின்னர் சேசிங் செய்த ராஜாஸ்தான் 17.3 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.