இந்த உலகிற்கே ஆதியாக விளங்குவது சிவபெருமான். சிவபெருமானை தரிசிப்பதற்காக பிரதோஷம், சிவராத்திரி என்று ஏராளமான விசேஷ நாட்கள் உள்ளது. ஒவ்வொரு விசேஷ நாட்களும் தனித்துவம் வாய்ந்தது. அதிலும் சிவராத்திரி தனித்துவம் வாய்ந்தது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது.
மாசி மாத மகாசிவராத்திரி மட்டும் ஏன் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது?
மாசி மாத மகாசிவராத்திரியின் அமைப்பு இயற்கையாகவே உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. மாசி மாத மகாசிவராத்திரி அன்று இரவு ஒருவர் விழிப்புடன் இருந்தால் இயற்கையாகவே நம்மில் இருக்கும் உயிர்சக்தியும் மேல்நோக்கி நகர்ந்திடும்.
ஆன்மீகவாதிகளும், சிவராத்திரி அன்று சிவனுக்கு பிடித்த மந்திரமான “ஓம் நமசிவாய” மந்திரம் ஜபித்து முக்கண் முதல்வனை வணங்கினால் நாம் நினைத்ததை பெறலாம் என்பது ஐதீகம். சர்வ மங்களங்களையும் அருளும் அற்புதமான திருநாளாக சிவராத்திரி நம்பப்படுகிறது.
பக்தர்களாகிய நாம் சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம். சிவராத்திரி விரதத்தால் நாம் நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும். மகாசிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் குளித்து விட்டு மறுநாள் வரை ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து சிவனை வழிபடவேண்டும்.
மகா சிவராத்திரியன்று முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். காசியில் வீடு பேரடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும் மகிழ்ச்சியும் வந்து சேரும் என்பது ஐதீகம் ஆகும். சிவபக்தர்கள் தங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவாறு விரதம் இருந்தால் போதும்.