அனைத்திற்கும் பரம்பொருளாக திகழும் ஆதிசிவனின் மகாசக்தி பற்றி பல புராண கதைகள் உள்ளன. யார் என்ன வரம் கேட்டாலும், உடனே அதனை அவர்களுக்கு கொடுப்பது ஈசனுக்கு நிகர் ஈசனே ஆவார். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
அத்தகைய எம்பெருமான் ஈசனுடைய அருளை பெறுவதற்கு சக்தி வாய்ந்த அரச மர வழிபாடு பௌர்ணமி அன்று செய்யும் பொழுது நமக்கு வேண்டிய வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும் என்பது ஐதீகம்.
பெளர்ணமி விரதம்:
பொதுவாகவே பவுர்ணமி நாளில் பிரபஞ்சத்தில் அதிக சக்தி இருக்கும். பௌர்ணமியில் நாம் செய்யும் ஒவ்வொரு வேண்டுதல்களும், பரிகாரங்களும், பூஜைகளும் கூட கூடுதல் பலன்களை கொடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. அத்தகைய பௌர்ணமி நன்னாளில் உணவு எடுக்காமல் விரதம் இருந்து இரவு நேரத்தில் இதனை செய்ய வேண்டும்.
அரசமரம் இருக்கும் இடத்திற்கு சென்று, அம்மரத்தை சுற்றி 1008 முறை வலம் வர வேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சிவபெருமானுடைய சக்தி வாய்ந்த பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்த படி வலம் வர வேண்டும் என்பது முக்கியமானது.
விரதம் இருப்பது எப்படி..?
இரவு முழுவதும் உண்ணாமல், உறங்காமல் முழுமையான விரதத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தை பொறுத்து நீங்கள் இதனை செய்வதா? வேண்டாமா? என்கிற முடிவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியத்திற்கு மிஞ்சிய விரதம் தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்டு வழிபாடு செய்யலாம். இரவில் கண்விழித்து பஞ்சாட்சர மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். முழுமையாக சிவனை சரணடைய வேண்டும்.
சன்னதியை வலம் வர வேண்டும்
பின்னர் காலையில் சிவன் கோவிலுக்குச் சென்று அங்கே இருக்கும் சிவபெருமான் சன்னதியில் தீபத்தில் நெய் ஊற்றி அதில் பஞ்சு திரி இட்டு விளக்கு ஏற்ற வேண்டும். அப்பொழுதும் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். விரதம் முடியும் வரை இந்த மந்திரத்தை உச்சரிப்பது நிறுத்தக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. விளக்கேற்றிய பின் சன்னிதியை சுற்றி ஒன்பது முறை குறையாமல் வலம் வர வேண்டும்.
திருமணத் தடை நீங்கும்
அதன் பிறகு பூஜையை நிறைவு செய்து விட்டு வீட்டிற்கு வந்து புதிதாக சமைத்த சுத்த அன்னத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவிற்கு வீட்டிற்கு மற்றவர்களை அழைத்து தயிருடன் கூடிய அன்ன தானத்தை செய்ய வேண்டும்.
அப்படி செய்ய முடியாதவர்கள் வெளியில் 5 பேருக்காவது உண்ண உணவின்றி இருப்பவர்களுக்கு தயிர் சாத உணவு பொட்டலங்களை வாங்கிக் கொடுக்கலாம். இப்படி செய்வதால் இறைவனுடைய முழு அருளும் உங்களுக்கு கிடைக்கும். கேட்ட வரம் உடனே கிடைக்கும். சுபகாரியத் தடை, திருமணத் தடை, தொழில் தடை போன்று எந்த விஷயத்தில் தடைகள் இருந்தாலும் அவைகள் நீங்கி ஏராளமான நன்மைகள் நடைபெறும்.