வாஷிங்டன்: பேஸ்புக் வரலாற்றில் ஒரு தனிப்பட்ட பேஜ் மிக வேகமான பயனாளர்களை பெற்று அதே வேகத்தில் அந்த பக்கத்தை பேஸ்புக் அதிரடியாக முடக்கியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் அதே நேரத்தில் தான் இந்த களேபரங்களும் நடந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் டிரம்ப் ஆதிக்கம் பெற்று இருந்தாலும் பின்னர் பிடன் கை ஓங்க தொடங்கியது. இதனால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக கூறி டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த கூறினார். அதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்களும் அந்த கோரிக்கையை கையில் எடுத்தனர்.அந்த சமயத்தில் தோன்றியது தான் ஸ்டாப் தி ஸ்டீல் ( Stop the Steal) என்கிற பெயரிலான பேஸ்புக் பக்கம். இந்த பேஸ்புக் பக்கம் தொடங்கியவுடன் அதில் ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒரு வயதான பெண்மணி டெட்ராயிடு நகரத்தில் வாக்கு எண்ணிக்கையின் மையத்துக்கு வெளியே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த சொல்கிறார்.
இந்த வீடியோவை பதிவிட்ட சில நிமிடங்களில் 2 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ஷேர் செய்பவர்கள் பெரும்பாலும் டிரம்ப் ஆதரவாளர்களாகவே இருக்கின்றனர். மேலும் பிடன் ஓட்டுக்களை திருடுகிறார் என்றும் கமெண்ட் பதிவிட்டு வந்தனர். இந்த வீடியோ ஸ்டாப் தி ஸ்டீல் பேஸ்புக் குழுவை பேஸ்புக் வரலாற்றிலேயே மிக வேகமாக வளர்ந்த ஒரு பேஸ்புக் குழுவாக மாற்றியுள்ளது. இந்த குழு தொடங்கி 22 மணி நேரத்தில் 320,000 க்கும் அதிகமான பயனர்களை பெற்றுள்ளது. சராசரியாக ஒவ்வொரு 10 வினாடிகளிலும் 100 புதிய பயனாளர்களை பெற்றது. இந்த குழுவின் அசுர வளர்ச்சி பின்னர் பேஸ்புக் நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்தது, அதைத்தொடர்ந்து வன்முறையைத் தூண்ட முயற்சித்ததற்காக இந்த குழுவுக்கு அடுத்த சில மணி நேரத்தில் பேஸ்புக் தடை விதித்தது.
இருந்த போதிலும் ஸ்டாப் தி ஸ்டீல் பேஸ்புக் குழு தனது பணியைச் செய்து முடித்திருந்தது. அதன் குறுகிய ஆயுட்காலத்தில், அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டொனால்ட் டிரம்பிற்கு எதிராக கையாளப்படுவதாக தவறான தகவலை வெளியிடும் மையமாக இது மாறியது. ஒவ்வொரு சில நிமிடங்களிலும் வாக்காளர் மோசடியை உறுதிப்படுத்தும் புதிய புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆதாரங்கள் என்று அந்த குழுவில் பல வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. அங்கிருந்து அவை அனைத்தும் ட்விட்டர், யூடியூப், வலதுசாரி பக்கங்களுக்கு ஷேர் செய்யப்பட்டுள்ளது.
தவறான தகவல்களை பரப்பும் பக்கங்கள் :
ஸ்டாப் தி ஸ்டீல் குழுவின் வருகையும் வளர்ச்சியும், இதுமாதிரியான பேஸ்புக் பக்கங்கள் தவறான தகவல்களை பரப்பும் சில ஆன்லைன் இயக்கங்களுக்கு விதை போடுவதிலும் அவற்றை தூண்டி விடுவதிலும் எவ்வளவு வலிமையானவையாக செயல்படுகின்றன என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. உதாரணமாக சாதாரண பேஸ்புக் கணக்கை கொண்டிருக்கு யார் வேண்டுமானாலும் இணையக்கூடிய பப்ளிக் குழுக்கள் இது மாதிரியான சிறிய தொடக்க குழுக்களுக்கான நரம்பு மையமாக நீண்டகாலமாக இருந்து வருகின்றன. அவற்றில் ஒன்று தான் QAnon எனப்படும் தடுப்பூசிக்கு எதிரான பேஸ்புக் பக்கம். இப்போது பேஸ்புக்கில் இந்த பக்கத்தை தேடினாலே பேஸ்புக் எச்சரிக்கை விடுக்கும்.
பொதுவாக பேஸ்புக் குழுக்கள் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கான சக்திவாய்ந்த உள்கட்டமைப்பு” என்று ஸ்டான்போர்டு இணைய ஆய்வகத்தின் போலி செய்திகள் குறித்த ஆய்வாளர் ரெனீ டிரெஸ்டா கூறினார். டிரம்பிடமிருந்து தேர்தல் முடிவுகள் சட்டவிரோதமாக பறிக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படை ஆதாரமற்ற நம்பிக்கையைச் சுற்றி மக்கள் ஒன்று திரள்வதற்கு ஸ்டாப் தி ஸ்டீல் பேஸ்புக் குழு உதவியது என்று அவர் மேலும் கூறினார். இதற்கிடையே பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் டாம் ரெனால்ட்ஸ், தேர்தலில் எடுக்கும் விதிவிலக்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஸ்டாப் தி ஸ்டீல் பக்கத்தை பேஸ்புக் முடக்கியதும் என்றார்.
தேர்தல் முடிவுகள் திருடப்பட்டு விட்டது என்கிற டிரம்பின் யோசனை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் மிக தீவிரமாக பரவ தொடங்கியது. டிரம்பின் இந்த ஆதாரமற்ற கருத்தை அவர்கள் கண்ணை மூடிக்கண்டு நம்ப தொடங்கினர். அதன் விளைவாக தொடங்கப்பட்டது தான் ஸ்டாப் தி ஸ்டீல் பேஸ்புக் பக்கம். இதில் பதிவிட்ட பெரும்பாலான படங்கள் மற்றும் வீடியோக்கள் பல தவறானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. சில புகைப்படங்கள் மற்றும் படங்கள் எடிட் செய்யப்பட்டவை அல்லது தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் கருத்தை ஆதரிப்பவை. இவை அனைத்தையும் பேஸ்புக் நிறுவனம் உடனடியாக கண்டறிந்து நீக்கியுள்ளது அல்லது அதில் லேபிள் இட்டுள்ளது.
உலகமே கவனித்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்கிற அடிப்படை ஆதாரமற்ற செய்தியாக இருந்தாலும் இதுமாதிரியான பேஸ்புக் பக்கங்களின் மூலம் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள் மிக எளிதாக வெகுஜன மக்களிடமும் அதே தவறான கருத்தை கொண்டு சேர்ப்பதற்கும் அவர்களை நம்ப வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த குழுவோட அதிவேக வளர்ச்சி மற்றும் அது கையில் எடுத்த தலைப்பு காரணமாக பேஸ்புக்கினால் உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் இவை இல்லாமல் பல பக்கங்கள் இப்படியான பொய்யான தகவலை மக்கள் மத்தியில் பரப்பும் வேளையில் ஈடுபட்டுள்ளன.