திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜோசன் ரஞ்சித் “DUDE” எனும் ஆங்கில கவிதை புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. Top-notch Foundation மற்றும் OUTLOOK வார நாளிதழ் இணைந்து நடத்திய இந்த சர்வதேச விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் பகன் சிங் குலஸ்தே, இந்திய நடிகை ஹேமாமாலினி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களான மத்திய அமைச்சரும், ஹேமமாலினியும் திருச்சி இளைஞரின் புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தின் முதல் பிரதியை புத்தக ஆசிரியரான ஜோசன் ரஞ்சித்தின் பெற்றோர் ஜான் பிரிட்டோ மற்றும் ஜோனி தனசீலி பெற்றுக்கொண்டனர்.
இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான சர்வதேச, இந்திய தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். கவிஞர் ஜோசன் ரஞ்சித் இதுவரை 4 தமிழ் புத்தகங்கள் மற்றும் 3 ஆங்கில புத்தகங்கள் வெளியீட்டுள்ளார். இந்நூல் இவரது 8ஆவது படைப்பாகும், தமிழகத்தில், திருச்சி மாவட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இருந்து நாட்டின் தலைநகரத்தில் நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்த இந்த இளைஞர் மேலும் பல படைப்புகள் சமூகத்திற்காக எழுத வாழ்த்துக்கள். இவ்விழாவில் வளரும் இளம் இந்திய எழுத்தாளர் விருதை உத்திரபிரதேச தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் வழங்கினார்.