தைபேய் : தைவான் வான் பாதுகாப்பு படையின் எப் 16 ரக போர் விமானம் ஒன்று பயிற்சியின் போது காணாமல் போனதையடுத்து உடனடியாக வானில் பறந்து கொண்டிருந்த எல்லா எப் 16 ரக போர் விமானங்களையும் தரையிறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தைவான் தனி நாடு கிடையாது என்றும் சீனாவின் ஒரு அங்கம் என்றும் நீண்ட காலமாக சீனா கூறிவருகிறது. சீனாவின் இந்த கருத்தினால் பல நாடுகள் இன்னமும் தைவானை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. இதற்கிடையே தைவானுக்கு 18 பில்லியன் மதிப்பில் F-16 ரக விமானங்கள் உட்பட மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியது. இதையும் சீனா கடுமையாக எதிர்த்து வந்தது. அதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் வான் எல்லைக்குள் அடிக்கடி தன்னுடைய போர் விமானங்களை அனுப்பி எச்சரிக்கை விடுத்தது.
மாயமான F-16 ரக போர் விமானம்
இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தைவானின் F-5E ரக போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்திருந்தார். இப்போது அடுத்த அதிர்ச்சி சம்பவமாக தைவானின் F-16 ரக விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது. 44 வயது விமானியுடன் ஒற்றை இருக்கை கொண்ட இந்த விமானம் செவ்வாய் கிழமை இரவு கிழக்கு தைவானில் உள்ள ஹூலியன் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட 2 நிமிடத்தில் ரேடாரின் கண்காணிப்பில் இருந்து மறைந்துவிட்டது. சுமார் 6,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது காணாமல் போனதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து உடனடியாக தைவான் வான் பரப்பில் கண்காணிப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 150 விமானங்களை உடனடியாக தரையிறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக சீன போர் விமானங்கள் தைவான் எல்லையில் அத்துமீறும் இந்த சூழலில் கண்காணிப்பு பணிக்காக இப்போது சிறிய அளவிலான கடற்படையை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கூறியுள்ள அதிபர் த்சாய் இங்-வென், மீட்பு பணியே இப்போது எங்களுக்கு முக்கியமானது. விமானப்படை எல்லா F-16 ரக போர் விமானங்களையும் தரையிறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சம்பவத்திற்கான காரணம் குறித்தும் உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
1997 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்க தொடங்கிய பிறகு இதுவரை F-16 ரக விமானம் சமபந்தப்பட்ட ஏழு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. சீனாவின் அத்துமீறல் அதிகரிக்க தொடங்கிய பிறகு தைவான் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு இந்த ஆண்டு அதன் போர் விமானங்களை பயன்படுத்தியுள்ளது. 2016 ஆம் ஆண்டு தைவானின் புதிய அதிபராக த்சாய் இங்-வென் பொறுப்பேற்ற பிறகு தைவான் தனி குடியரசு கட்சி என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா அதன் பிறகு தைவான் மீதான ராணுவம் மற்றும் ராஜாங்க ரீதியிலான பிடியை இறுக்கியதும் குறிப்பிடத்தக்கது.