Saturday, March 25, 2023
Homeசெய்திகள்இந்தியாஎல்லையில் பதட்டம் அப்படியே தான் உள்ளது.. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பரபரப்பு கருத்து

எல்லையில் பதட்டம் அப்படியே தான் உள்ளது.. முப்படைகளின் தளபதி பிபின் ராவத் பரபரப்பு கருத்து

டெல்லி: லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் நிலைமை இன்னும் பதட்டமான சூழலில் தான் இருப்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

கடந்த மே மாதத்தில் இருந்து எல்லையில் நிலைமை பதட்டமான சூழல் உள்ளது. கிழக்கு லடாக்கில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் அத்துமீற முயன்றதை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொண்ட பிறகும் இன்னமும் அமைதி திரும்பவில்லை. பேச்சுவார்த்தையின் போது மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தின் படி சீனா நடந்துகொள்ள மறுப்பதே இதற்கு முக்கிய காரணம். இதற்கிடையே ஏழு கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் எட்டாம் கட்ட ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையும் விரைவிலேயே நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தான் எல்லையில் இன்னமும் அதே நிலை தான் நீடிப்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். இந்தியப் படைகளின் உறுதியான பதிலடியால் சீனாவின் பி.எல்.ஏ ராணுவம் லடாக்கில் எதிர்பாராத விளைவுகளை எதிர்கொள்கிறது. இந்தியா இனி எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் எந்த விதமான ஆக்கிரமிப்பு முயற்சியையும் ஏற்றுக்கொள்ளாது. நாங்கள் உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் எந்த விதமான மாற்றங்களை நிகழ்த்த அனுமதிக்க மாட்டோம். எல்லை மோதல்கள், தூண்டப்படாத ராணுவ நடவடிக்கைகள் மூலம் பெரிய மோதல்களுக்கு வழிவகை செய்வதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானுடனான உறவு குறித்து பேசிய பிபின் ராவத், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தடையற்ற பினாமி யுத்தத்தை கட்டவிழ்த்து விட்டது. அதோடு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடும் இந்தியா-பாகிஸ்தான் உறவை புதிய தாழ்வு நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், மற்றும் பாலகோட் தாக்குதல் தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் அனுப்ப முயற்சிக்கும் நம்முடைய அண்டை நாட்டுக்கு வலுவான ஒரு செய்தியை அனுப்பியிருக்கும் என்றார்.

இதற்கிடையே நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இணையக் கருத்தரங்கு ஒன்றை தொடக்கி வைத்து பேசுகையில், அமைதி ஏற்படுவதற்கான ஆசை இருந்தால் மட்டும் போதாது, போரை தடுப்பதற்கான திறனும் இருந்தால் தான் அமைதியை நிலைநாட்ட முடியும் . மேலும் இந்தியா தனது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க எந்த தியாகத்தையும் செய்ய உறுதியாக உள்ளது என்றார். சீனாவுடனான பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இவர்களுடைய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.