Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் கப்பல்.. விரட்டி சென்ற ரஷ்ய கப்பல்.. நடுக்கடலில் நடந்த சம்பவம்

அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர் கப்பல்.. விரட்டி சென்ற ரஷ்ய கப்பல்.. நடுக்கடலில் நடந்த சம்பவம்

மாஸ்கோ: ரஷ்ய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷ்ய கப்பல் துரத்தி சென்றதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

சமீப காலமாக ரஷ்யா அமெரிக்க உறவு மீண்டும் பழைய நிலையை அடைந்து வருகிறது. அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் ரஷ்யாவுடன் சுமூக உறவை கொண்டிருந்தது அமெரிக்கா. ஜி7 மாநாட்டில் ரஷ்யாவும் கலந்து கொள்ள வேண்டும் என அமெரிக்கா அழைப்பு அளவுக்கு இருநாட்டு உறவும் இருந்தது. இதற்கு கடந்த முறை அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா மறைமுகமாக உதவியதும் காரணமாக சொல்லப்பட்டது.

ஆனால் இம்முறை ஜோ பிடன் வெற்றி பெற்றதில் இருந்து ரஷ்யா மீண்டும் அமெரிக்காவுடன் மல்லுக்கட்ட தொடங்கியது. ஜோ பிடன் வெற்றி பெற்றதை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் ரஷ்யா பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்காவின் போர் கப்பல் ஒன்று ரஷ்யாவின் கடல் பிராந்தியத்திற்குள் அத்துமீறியுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

யுஎஸ்எஸ் ஜான் எஸ் மெக்கெய்ன் கப்பல்

இதுதொடர்பாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் கடற்படையை சேர்ந்த ஏவுகணை தாங்கிய யுஎஸ்எஸ் ஜான் எஸ் மெக்கெய்ன் கப்பல் ஜப்பான் கடலுக்கு அருகே ரஷ்யாவின் பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து இயங்கி கொண்டிருந்ததை ரஷ்யாவின் போர்க்கப்பல் கண்டுபிடித்தது.

ரஷ்ய கப்பலின் அட்மிரல் வினோகிரேடோவ் அமெரிக்க கப்பலை வாய்மொழியாக எச்சரிக்கை செய்ததோடு, அவர்களை வெளியேற கட்டாயப்படுத்தும் விதமாக தாக்குதல் மேற்கொள்வோம் என்றும் அச்சுறுத்தியிருந்தார். இந்த எச்சரிக்கைக்கு பிறகு அமெரிக்க கப்பல் மீண்டும் சர்வதேச கடல் பகுதிக்குள் திரும்பி சென்று விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பசுபிக் கடற்பகுதியில் இருக்கும் ரஷ்ய கப்பல், அமெரிக்காவின் போர் கப்பலை கண்காணித்து வந்தன, அது மாஸ்க்கோவின் எல்லையை கடந்து 2 கி.மீ தூரம் உள்ளே நுழைந்திருக்கிறது. இந்த சம்பவம் பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் நடந்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க போர்க்கப்பல் அப்பகுதியை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் ரஷ்ய கடலுக்குள் நுழைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் அட்மிரல் வினோகிரேடோவ் அதன் நகர்வுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேலும் மற்றொரு போர் கப்பலையும் ரஷ்யா அந்த பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக இப்படியான சம்பவங்கள் நடைபெறுவது அரிதானது, இது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் மோசமான இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.