Monday, March 27, 2023
Homeசெய்திகள்உலகம்இல்லாத தூதரை திரும்ப பெற சொன்ன பாகிஸ்தான் நாடாளுமன்றம்.. காமெடியான பாகிஸ்தானின் முடிவு

இல்லாத தூதரை திரும்ப பெற சொன்ன பாகிஸ்தான் நாடாளுமன்றம்.. காமெடியான பாகிஸ்தானின் முடிவு

இஸ்லாமாபாத்: பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது.ஆனால் இதில் சோகமான செய்தி என்னவென்றால் பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.

பிரான்சில் கடந்த வாரம் பள்ளி வகுப்பறையில் வைத்து இஸ்லாமியர்களின் இறைதூதரான முகமது நபியின் கார்ட்டூனை காட்டியதற்காக ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இது உலகம் முழுவதிலும் பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து கருத்து கூறிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இஸ்லாமிய பிரிவினைவாதிகள் என குறிப்பிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். பிரான்ஸ் அதிபரின் கருத்து மற்றும் முகமது நபியின் உருவத்தை கேலிச்சித்திரம் வரைந்த அந்த வாரப்பத்திரிகைக்கு எதிராக அரபு நாடுகள் கொந்தளிக்க தொடங்கின.

பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அரபு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. ஈராக், துருக்கி, காசா, பங்களாதேஷ் உள்ளிட்ட பகுதிகளில் கேலிச்சித்திரத்துக்கு எதிராக ஏற்கனவே போராட்டம் நடைபெற தொடங்கியுள்ளது. இதில் முக்கியமாக துருக்கி தான் பிரான்ஸை கடுமையாக எதிர்த்து வருகிறது. துருக்கி அதிபர் எர்டோகன் பிரான்ஸ் அதிபரின் மனநிலை குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் துருக்கிக்கான தங்கள் நாட்டு தூதரை திரும்ப பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் தான் இந்த கோதாவில் பாகிஸ்தானும் களமிறங்க திட்டமிட்டது. அதன்படி முகமது நபி குறித்த அந்த கார்ட்டூனுக்கு கண்டனம் கூறாத பிரான்ஸ் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதரை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டு நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஆனால் தற்போது பிரான்ஸ் நாட்டுக்கு எந்த ஒரு பாகிஸ்தான் தூதரும் நியமிக்கப்படவில்லை. கடைசியாக பிரான்சில் தூதராக இருந்த மெயின் அல் ஹக் மூன்று மாதத்திற்கு முன்பு சீனாவுக்கு மாற்றப்பட்ட பிறகு வேறு எந்த புதிய தூதரையும் பாகிஸ்தான் இதுவரை நியமனம் செய்யவில்லை. இப்படியான நிலையில் இல்லாத ஒரு தூதரை திரும்ப பெற சொல்லி பாகிஸ்தான் நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.