Thursday, May 25, 2023
Homeசெய்திகள்பல உயிர்களை காப்பாற்றிய செவிலியர்களை முச்சந்தியில் நிறுத்திவிட்டது தி.மு.க. ஆட்சி - விஜயபாஸ்கர்

பல உயிர்களை காப்பாற்றிய செவிலியர்களை முச்சந்தியில் நிறுத்திவிட்டது தி.மு.க. ஆட்சி – விஜயபாஸ்கர்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது, “ஓமந்தூரார் மருத்துவமனையை கொரோனா மருத்துவமனையாக மாற்றியவுடன் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் பயந்து ஓடி விட்டனர். மருத்துவமனை முதல்வர் மட்டுமே பணியில் இருந்தார். ஆனால் ஒப்பந்த செவிலியர்கள் கொரோனா முதல் அலையின் போதே, துணிந்து பணிக்கு வந்து பல உயிர்களை காப்பாற்றினர்.

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வது என்பது சாதாரண ஒன்று. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. கொரோனா முழு உடல் கவச உடையுடன் இரவுப் பணி பார்த்தவர்களை பல ஊர்களில் நின்று போராடும் நிலைக்கு அரசு தள்ளி விட்டது. ஒப்பந்த செவிலியர்களை விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது வேதனை அளிக்கிறது. எம்.ஆர்.பி. தேர்வில் முறையாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு , சமூக இட ஒதுக்கீட்டை பின்பற்றித்தான் அனைவரும் நியமனம் செய்யப்பட்டனர்.

8500 நபர்களுக்கு பணி அழைப்பு வழங்கப்பட்டபோது 300 நபர்கள்தான் பணிக்கு வந்தனர். பணியில் சேர 15 நாள் இடைவெளி கொடுத்தல் அவர்களும் மனம் மாறி விடுவார்கள் என்பதால், மூன்றே நாளில் பணிக்கு வரவேண்டும் என அழைப்பு கொடுத்தோம். இதுதான் உண்மை. ஆனால் உங்களை இப்படி முச்சந்தியில் நிறுத்திவிட்டது இந்த ஆட்சி , இது ஆட்சிக்கு ஆபத்தாக அமையும்.

செவிலியர்கள் உடுத்தியுள்ள கவச ஆடைகளை தற்போது உள்ள சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உடுத்தி 8 அல்லது 12 மணி நேரம் கழிப்பிடம் செல்லாமல் பணியாற்றினால், ஆட்சி செய்து வரும் அரசு என்ன கூறினாலும் அதனை நான் தட்டாமல் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா பணி செய்ததால் பல செவிலியர்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.

கலகத் தலைவன் திரைப்படம் நன்றாக இருக்கிறதா? என்று கேட்கும் முதல்வர் என்றாவது ஒப்பந்த செவிலியர்கள் நன்றாக இருக்கிறீர்களா? என கேட்டிருப்பாரா..? இரண்டரை ஆண்டுகளாக வேலை வாங்கி விட்டு இப்போது பணியிலிருந்து நீக்கப்பட்டது சரியா?
ஒப்பந்த செவிலியர்களுக்கு கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது. ஒப்பந்த செவிலியர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நீதிமன்றமே தெரிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராடிய கனிமொழி இப்போது எங்கே சென்றார்?” இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜயபாஸ்கர் கூறியதாவது,
தேர்தல் வாக்குறுதியில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்வோம் என்று சொல்லினார்கள் அவர்கள் சொன்ன தேர்தல் வாக்கு உறுதிப்படி அவர்கள் நடந்து கொண்டால் போதும். வரும் 9 தேதி தொடங்க உள்ள பேரவை கூட்டத்தொடரில் பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி அமர்த்த கோரி அ.தி.மு.க. தரப்பில் குரல் எழுப்பப்படும். பணி நீக்கப்பட்ட செவிலியர்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேரவையில் குரல் எழுப்புவார் என்றார்.