டெல்லி : கிழக்கு லடாக் எல்லையில் சீனாவுடன் பதட்டம் இருக்கும் சூழலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்த மாதம் 5 முறை காணொலி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் சந்தித்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகை தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இரன்டு நாட்கள் உபசரித்து அனுப்பி வைத்தனர். அந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதத்தில் இருந்து எல்லையில் மீண்டும் சீனா தன் வேலையை காட்ட தொடங்கியுள்ளது. சீன ராணுவத்துடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நிலைமை மேலும் மோசமானது.
இதற்கிடையே இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் மாஸ்கோவில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிகழ்விற்கு பிறகு இதுவரை மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்தித்துக்கொண்டதில்லை. இந்த நிலையில் தான் இந்த மாதம் காணொலி காட்சி மூலமாக நடைபெற உள்ள முக்கியமான கூட்டத்தில் மோடி மற்றும் ஜி ஜின்பிங் சந்திக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 10ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பு நவம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. மற்றும் ஜி-20 நாடுகளின் கூட்டம் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. மேலும் நவம்பர் 11ம் தேதி நடைபெற உள்ள கிழக்காசிய உச்சி மாநாடு, நவம்பர் 30ம் தேதி புதுடெல்லி நடத்தும் ஷாங்காய் ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்கள் கூட்டம் ஆகியவை காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்த கூட்டங்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு தலைவர்களும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காணொலி வாயிலாக நடைபெற்ற ஜி 20 உச்சிமாநாட்டில் கொரோனவைரஸ் தொற்றுநோயைப் பற்றி விவாதித்தனர், இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர நடவடிக்கைகள் சீர்குலைத்துள்ளது.
இந்த உச்சிமாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் வெளிவிவகார அமைச்சகம் பரபரப்பான தயாரிப்புகளை மேற்கொண்டு வருவதாக வெளியுறவு வட்டாரங்களுக்கு நெருக்கமான பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதிலும் விநியோகிப்பதிலும் மற்றும் பங்கெடுப்பதில் இந்தியாவின் முயற்சிகளை அதிகப்படுத்தவும், மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குவதன் மூலமும் தொற்றுநோய்க்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கை அதிகரிப்பது தொடர்பாகவும் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இம்மாதிரியான கூட்டங்களின் போது இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுபோன்ற மாடுகளின் போது குறுப்பிட்ட நாடுகளை வலியுறுத்துதல் அல்லது இருதரப்பு சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை பேச வாய்ப்பில்லை. இது தவிர இந்த சந்திப்புகளில் ஒவ்வொரு தலைவர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க குறிப்பிட்ட நேரங்களை ஒதுக்கப்படும் இதன் காரணமாகவும் இந்தியா சீனா எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.