இமாச்சல் பிரதேசத்தில் முதல் முறையாக பெருங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்துள்ளது IHBT மற்றும் CSIR. இதன்மூலம் இனி பெருங்காய இறக்குமதியை குறைத்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம்.
இந்தியர்களின் சமையலில் பெருங்காயம் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்தியாவின் அணைத்து பகுதிகளிலும் இதன் பயன்பாடு உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது. 2019 ஆம் ஆண்டில் மட்டும், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தானில் இருந்து சுமார் 1500 டன் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய சுமார் 942 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது இந்தியா. உலக அளவில் உற்பத்தியாகும் பெருங்காயத்தில் 40 சதவிகிதம் இந்தியாவில் தான் பயன்படுத்தப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்ற ஆய்வகமான CSIR-ன் உதவியுடன் இமாலய உயிரி தொழில்நுட்ப நிறுவனம் ( IHBT) இணைந்து இமாச்சல பிரதேசத்தில் விவசாயிகளுடன் இணைந்து பெருங்காய சாகுபடி செய்ய உள்ளனர். IHBT – CSIR இணைந்து பெருங்காய விதைகளை ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்டு அதற்கான வேளாண் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது பிரதமர் நரேந்திர மோடியின் நாட்டின் இறக்குமதி செலவினத்தை குறைக்கும் திட்டத்திற்கு உந்துதலாக இருக்கும் . வேளாண் போன்ற பல துறைகளில் தன்னிறைவை அடைவதன் மூலம் மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புத்துறைகளிலும் தன்னிறைவை பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.
நாட்டிலேயே ஆஸ்ஃபோடிடா எனப்படும் பெருங்காயம் உற்பத்தி என்பது ஒரு புதிய முயற்சி ஆகும். இதை நிறைவேற்றுவதற்காக இமாச்சல பிரதேசத்தில் லாஹுல் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாயிகளுடன் இணைந்து பெருங்காயம் தாவரங்கள் சாகுபடி செய்யப்பட உள்ளது. இதன் முதல் முயற்சியாக கடந்த 15 ஆம் தேதி CSIR இயக்குனர் டாக்டர் சஞ்சய் குமார் லாஹுல் பள்ளத்தாக்கில் க்வாரிங் கிராமத்தில் முதல் விதையை பயிரிட்டு தொடங்கி வைத்தார்.
Also Read: உலகின் உயரமான மற்றும் ஆபத்தான போர்க்கள பகுதி.. இந்தியா எவ்வளவு செலவு செய்கிறது தெரியுமா?
இதுகுறித்து அவர் கூறுகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ .3 லட்சம் வரை செலவாகும், அதன்பிறகு அவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .10 லட்சம் நிகர வருமானத்தை அளிக்கும். நாங்கள் மாநில அரசாங்கங்களுடன் இணைந்து நிதி மற்றும் தொழில்நுட்ப அறிவுள்ள விவசாயிகளுக்கு ஆதரவை வழங்குவோம் என்றார். குளிர்ந்த மற்றும் வறண்ட பகுதிகள் பெருங்காயத்தை பயிரிட உகந்த நிலங்களாக இருப்பதால் இமாச்சல பிரதேசதின் சில பகுதிகள் இதற்கு ஏற்ற பகுதியாகும். மேலும் இந்த பயிரின் சாகுபடி இப்பகுதி மக்களின் பொருளாதார நிலையையும் மாற்றும் திறன் கொண்டது. தற்போது, IHBT 300 ஹெக்டேர் நிலத்தில் சாகுபடி செய்ய உள்ளது. விவசாயிகள் ஐந்து வருட சுழற்சியை வெற்றிகரமாக முடித்து அதன் முடிவுகளைப் பார்த்தவுடன் இதை மேலும் சில பகுதிகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
பெருங்காயம் ஒரு அழியா தாவரமாகும். ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அதிகம் பயிரிடப்படும் பெருங்காயம் இதுவரை இந்தியாவில் பயிரிடப்பட்டதே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் இனிவரும் காலங்களில் இந்தியாவின் பெருங்காய தேவை அனைத்தையும் உள்நாட்டிலேயே உற்பத்திசெய்ய முடிவெடுத்துள்ளனர்.