இந்தியா முழுக்க கொரானோ ஊரடங்கு காரணமாக 160 நாட்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மற்ற தொழில்கள் ஓரளவிற்கு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருக்கும் நிலையில், தியேட்டர்கள் மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
இதனால் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு, ரிலீசுக்கு தயாராகி உள்ள பல்வேறு திரைப்படங்கள் வெளிவராமல் முடங்கிக் கிடக்கின்றன. திரையரங்குகளை விரைவில் திறக்கக்கோரி சினிமா துறை மட்டுமின்றி பலதரப்பில் இருந்தும் ஆவல் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் திரையரங்குகளை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை அமைப்பு திரையரங்கு உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்கத்தினருடன் 8 ஆம் தேதி ஆலோசனை நடத்த இருக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தென்னிந்திய தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தை மத்திய அரசு புறக்கணித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அதிகளவு படங்கள் எடுக்கும் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக கூறும் தகவல் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
தியேட்டர் திறப்பு குறித்த ஆலோசனையில் தென்னிந்தியாவில் உள்ள எந்த சங்கத்திற்கோ, தியேட்டர் உரிமையாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிகிறது.