Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர் நியாபகம் இருக்கா? அவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

ஐபோன் வாங்க கிட்னியை விற்ற இளைஞர் நியாபகம் இருக்கா? அவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

பீஜிங் : 2011 ஆம் ஆண்டு புதிய ஐபோன் வாங்குவதற்காக தன்னுடைய கிட்னியை விற்ற இளைஞர் இப்போது சிறுநீரக குறைபாட்டால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் 12 சீரிஸ் சந்தைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் ஐபோன் புதிய மாடல் வெளியாகும் போதும் அதில் இருக்கும் வசதிகள் சிறப்பம்சம் குறித்து இணையத்தில் பெரிய விவாதமே நடத்தப்படும். அதேசமயம் அதற்கு நிகராக ஐபோன் விலை குறித்தும் நெட்டிசன்கள் அதிகம் விவாதிப்பர் சில சமயம் கிண்டலும் செய்வர். குறிப்பாக ஐபோன் வாங்குவதற்காக கிட்னியை விற்பது போன்ற மீம்கள் இணையத்தில் அதிகம் வளம் வரும். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை.

2011 ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த வாங் ஷாங்கு என்கிற 17 வயது இளைஞர், புதிய ஐபோன் வாங்குவதற்காக தன்னுடைய இரண்டு கிட்னிகளில் ஒன்றை விற்க முடிவு செய்தார். அதன்படி கள்ளச் சந்தையில் 3,273 அமெரிக்க டாலருக்கு விற்று ஒரு ஐபோன் 4 மற்றும் ஒரு ஐபேட் 2 வாங்கியுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை வாங்குவதற்காவே தான் கிட்னியை விற்றதாகவும் வாங் ஷாங்கு கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வாயிலாக இந்த ஒப்பந்தம் நடைபெற்றதுள்ளது. இதற்கான விலை பேசி முடிக்கப்பட்டவுடனே சட்டவிரோதமாக அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு இருக்கிறார்.

அவர் கிட்னியை விற்று கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவர் இப்போது சிறுநீரக குறைபாட்டால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்கையில் கிடக்கிறார். அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறிது நாட்களிலேயே அவருடைய மற்றொரு கிட்னியில் தொற்று ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதன் காரணமாக அவருடைய உறுப்பு செயலிழந்துள்ளது. அதை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளில் அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்து இப்பொது படுத்த படுக்கையில் இருக்கிறார். இதனால் அவருக்கு தினசரி டயாலிசிஸ் செய்யப்படுகிறது.

உடல்நிலை மோசமடைய தொடங்கிய பிறகு வாங் ஷாங்கு தாமாக முன்வந்து வாக்குமூலம் கொடுத்ததையடுத்து இது தொடர்பாக உடல் உறுப்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஐபோன் மீது இருந்த மோகத்தால் உடல் உறுப்பை விற்ற இளைஞரின் நிலை மோசமடைந்து இருப்பதை சுட்டிக்காட்டி இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.