Saturday, March 25, 2023
Homeசெய்திகள்உலகம்மக்களை முகாம்களில் அடைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா.. வெளியான பகீர் அறிக்கை

மக்களை முகாம்களில் அடைக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா.. வெளியான பகீர் அறிக்கை

ஜின்ஜியாங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லீம்களை அவர்களின் தரவுகளை வைத்து தானியங்கி கணினி குறிப்பிடும் நபர்களை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன முஸ்லிம்கள் மீது சீனா அடக்குமுறையை கையாள்வதாக நீண்ட காலமாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இதுகுறித்த உண்மைகள் வெளி உலகிற்கு தெரியவந்தது. அமெரிக்கா அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்தது.

அந்த பகுதிகளில் மிகப்பெரிய தடுப்பு முகாம்களை சீனா கட்டி வைத்து சுமார் 10 லட்சம் உய்குர் இன ஆண்களை சிறைபிடித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அங்கு அவர்களுக்கு கடுமையான சித்திரவதைகள் கொடுக்கப்படுகின்றன. மேலும் அவர்களின் மத நம்பிக்கைகளை கைவிடுமாறும் ஒரே சீனா கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன.

அதுமட்டுமல்லாமல் அங்கு மரண தண்டனை கொடுக்கப்படுபவர்களின் உடல் உறுப்புகளும் திருடப்படுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதை சீனா மறுத்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு மரண தண்டனை வழங்குவதில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையில் சீனா தெரிவித்துள்ளது. அப்பகுதி மக்கள் மத வழிபாடுகளை பின்பற்றுவதும், மத அடையாளங்களை வெளிக்காட்டி கொள்வதற்கும் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி அந்த தடையை மீறுவோரை அந்த தடுப்பு முகாமிற்கு கைது செய்து கொண்டு சென்றுவிடுவர்.

ஆனால் இந்த தடுப்பு முகாம்களை சீன அரசாங்கம் பாதுகாக்கப்பட்ட மறு கல்வி மையங்கள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் என்றும், அங்கு கலந்து கொண்ட அனைவருமே பட்டம் பெற்றவர்கள் மற்றும் அவர்களுக்கான காலம் முடிந்ததும் வீட்டிற்குச் சென்றுள்ளனர் என்றும் கூறி வருகிறது. இந்த நிலையில் தான் அந்த தடுப்பு முகாம்களுக்கு செல்வோரை அதிகாரிகளுக்கு பதில் தானியங்கி கணினி தேர்ந்தெடுத்து அது குறிப்பிடும் நபரை முகாம்களில் அடைத்து வைப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

தரவுகளை வைத்து அடையாளம் காணப்படும் மக்கள்:

அக்ஸு மாகாணத்திலிருந்து 2,000 கைதிகளின் பெயர் பட்டியல் கொண்ட போலீஸ் தகவல்கள் கசிந்துள்ளது, இது ஜின்ஜியாங் முஸ்லிம்கள் மீது சீனாவின் அடக்குமுறையானது இப்போது தொழில்நுட்பத்தால் எவ்வாறு ஊக்கப்படுத்தப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனாவின் முன்னெச்சரிக்கை தடுப்பு போலீஸ் பிரிவால் சுட்டிக்காட்டப்பட்ட நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இது ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாட்டு தளம் (IJOP) என அழைக்கப்படுகிறது. அதன்படி அங்குள்ள மக்களின் தரவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் தடுப்பு முகாம்களுக்கு அனுப்படுவோரை அடையாளம் காணும்.

உய்குர் மக்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் வழங்கப்பட்டிருக்கும். அதை வைத்து அவர்கள் சர்வதேச புனித பயணங்கள் மேற்கொள்வது, குர்ஆன் படிப்பது, மத உடைகளை அணிவது, உள்ளிட்ட காரணங்களை அடிப்படியாக வைத்து அவர்கள் தேர்வுசெய்ய படுகிறார்கள். அதிகாரிகள் சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யும் முன்பு ஒருங்கிணைந்த கூட்டு செயல்பாட்டு தளம் மூலம் தொழில்நுட்பத்தால் அடையாளம் காணப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுக்கான தொலைபேசி அழைப்புகள், நிலையான முகவரி இல்லாதது, மீண்டும் மீண்டும் தங்கள் தொலைபேசியை அணைத்து வைப்போர் அல்லது பொதுவாக நம்பத்தகாதவர்கள் என்று கருதுபவர்கள் போன்ற காரணங்களால் சட்ட ரீதியான நடவடிக்கை என்று பெரும்பான்மையான மக்கள் இப்படி தடுப்பு முகாம்களுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அங்கு அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்களில் வெறும் 10 சதவிகிதத்தினர் மட்டுமே தீவிரவாததுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிப்பவர்கள்.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அவர்களுக்கு தகவல் வழங்கியவர்கள் பெயரை பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை. இருப்பினும் ஏற்கனவே தடுப்பு முகாம்களுக்குள் இருந்து ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை எடுத்து கொடுத்தவர்களிடம் இருந்து இவர்கள் அக்ஸு மாகாணத்தின் போலீஸ் தகவல்களை பெற்று இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் சீன அரசு தரப்பில் இருந்து இந்த குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விளக்கங்களும் கூறப்படவில்லை. ஆனால் சமீபத்தில் ஜின்ஜியாங் மக்கள் மீதான கண்காணிப்பு செலவை சீனா அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.