Tuesday, March 28, 2023
Homeசெய்திகள்உலகம்அருணாசலப் பிரதேசம் எல்லைக்கு அருகே புதிய ரயில்பாதை.. இந்தியாவை சீண்டும் சீனா

அருணாசலப் பிரதேசம் எல்லைக்கு அருகே புதிய ரயில்பாதை.. இந்தியாவை சீண்டும் சீனா

பீஜிங் : அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள திபெத் நகரத்தில் ரயில்பாதை அமைக்க சீனா முடிவெடுத்துள்ளது. எல்லையில் ஏற்கனவே பதட்டம் இருக்கும் நிலையில் சீனாவின் இந்த முடிவு முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.

அருணாசலப் பிரதேசத்தை சீனா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது. அருணாசலப் பிரதேசம் தெற்கு திபெத் என்றும் கூறுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அருணாசலப் பிரதேசம் வருகைக்கு கூட சீனா கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தான் சீனாவின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் ஷின்குவான் மாகாணத்திற்கும் திபெத்தின் லின்ஸி பகுதிக்கும் இடையே 47.8 பில்லியன் டாலர் செலவில் ரயில்பாதை அமைக்க சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த லின்ஸி இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்திற்கு அருகே அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிங்காய்-திபெத் ரயில்வே திட்டத்திற்குப் பிறகு ஷின்குவான்- லின்ஸி திட்டம் திபெத்தில் சீனா மேற்கொள்ளும் இரண்டாவது ரயில்வே திட்டமாகும். ஷின்குவான் மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் தொடங்கி, யான் வழியாக பயணித்து காம்டோ வழியாக திபெத்துக்குள் நுழைகிறது, செங்டுவிலிருந்து லாசா செல்லும் பயண நேரம் இதன்மூலம் 13 மணி நேரமாக குறையும்.

இந்த லின்ஸி மாகாணம் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்திற்கு அருகே அமைந்துள்ள பகுதியாகும். இந்தியா-சீனா நாடுகள் எல்லையில் 3,488 கி.மீ தூரம் பகிர்ந்து கொள்கிறது. இதில் பல பகுதிகளில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக வீடியோ கான்பரென்ஸிங் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ஜி ஜின்பிங் தேசிய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் திட்டத்தின் முக்கிய பங்கை வலியுறுத்தினார். இன ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை பலப்படுத்துதல் அவசியம் என்றும் கூறினார். இந்த திட்டம் மேற்கு பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு, குறிப்பாக சின்குவான் மாகாணம் மற்றும் திபெத் தன்னாட்சி பிராந்தியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று ஜி ஜின்பிங் கூறினார்.

இமயமலைப் பகுதியில் சீனா கட்டிய ஐந்து விமான நிலையங்களில் ஒன்றான லின்ஸிக்கும் ஒரு விமான நிலையம் உள்ளது. இப்போது அங்கு ரயில் பாதையையும் அமைப்பது அருணாசலப் பிரதேசத்தில் சீனா அத்துமீறலில் ஈடுபட மேலும் சாதகமான சூழலை உருவாக்கும் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளன.