கோழிக்கறி என்றாலே ருசிக்கு குறையே சொல்லத் தேவையில்லை. நாம் எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் எல்லாமே உள்ளது. கோழிக்கறியை நாம் வித விதமாக சமைத்து சாப்பிடலாம். இன்று ஸ்பெஷல் சிக்கன் சால்னா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
• கோழிக்கறி – 1/2 கிலோ
• எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
• வெங்காயம் – 1
• பச்சை மிளகாய் – 3
• தக்காளி – 2
• மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
• மல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
• மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
• சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• தண்ணீர் – தேவையான அளவு
• இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
• கொத்த மல்லி – சிறிது
• எண்ணெய் – 1 டீஸ்பூன்
• பட்டை – 2 இன்ச்
• சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்
• ஏலக்காய் – 5
• கிராம்பு – 5
• தேங்காய் – 1 கப் (நன்றாக துருவிக்கொள்ள வேண்டும்)
• கசகசா – 3 டேபிள் ஸ்பூன்
செய்வது எப்படி?
• முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அடுப்பை பற்ற வைத்த பிறகு அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பின் அதில் வறுப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்க வேண்டும்.
• பின்பு அதை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
• பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
• அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
• பின்னர், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
• பின் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி, தயாராக வைத்துள்ள கோழிக்கறியை சேர்த்து, மசாலாவுடன் ஒன்று சேர நன்கு பிரட்டி விட வேண்டும்.
• அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, 10 நிமிடம் கழித்து குக்கரை இறக்கி வைக்க வேண்டும்.
• பின் நன்றாக வெந்துள்ள கோழிக்கறியை மீண்டும் அடுப்பில் வைத்து, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை ஊற்றி கிளற வேண்டும்.
• சுமார் 10-15 நிமிடம் குறைவான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கிய பிறகு கொத்த மல்லியைத் தூவ வேண்டும்.
பின்னர், வாசனை கமகமக்க சுவையான சிக்கன் சால்னா தயார். வீட்டில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து பாராட்டுகளை அள்ளுங்கள்.