கடைகளில் பெரும்பாலான இடங்களில் பலகாரங்களுக்கு ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யையே மீண்டும் பயன்படுத்துகின்றனர். ஆனால், வீடுகளில் நாம் பார்த்து பார்த்து எண்ணெய்யை ஆரோக்கியத்திற்கு பயன்படுத்துகிறோம்.
இருப்பினும், சில சமயங்களில் எண்ணெய் அதிகளவில் மீதமானால் அதை நாம் கீழே ஊற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அவ்வாறு மீதமாகும் எண்ணெய்யை நாம் மீண்டும் பொறிக்கவோ, வறுக்கவோ பயன்படுத்தினால் அதிகளவு ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால், அதை நாம் சமையலுக்கு பயன்படுத்தலாம்.
ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பை கீழே காணலாம்.
- ஒருமுறை பொறிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெய்யை ஆற வைத்து, அதனை சுத்தமான காட்டன் துணி அல்லது வடிகட்டியில் பொறித்த உணவுத் துகள்கள் ஏதுமின்றி சுத்தமாக வடிகட்டி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
- இவ்வாறு சேமித்து வைத்த எண்ணெய்யை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.
- இதனை மீண்டும் பயன்படுத்தும் போது எண்ணெய்யை அதிகம் சூடாகாமல் பயன்படுத்த வேண்டும். அதாவது, வறுத்தல் போன்றவற்றை தவிர்த்து கிரேவி, குழம்புகளுக்கும் மற்றும் இதர சமையல் வகைகளுக்கும் ஏற்கனவே நாம் பயன்படுத்திய எண்ணெய்யை உபயோகிக்கலாம்.
அதே சமயத்தில், வெவ்வேறு பலகாரங்கள் செய்த எண்ணெய்யை நாம் ஒன்றாக சேமித்து வைக்க கூடாது. நாம் சிக்கனம் என்ற பெயரில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை பலமுறை சூடுபடுத்தி பயன்படுத்தினால் நமக்கு பல்வேறு நோய்களும் உடல் உபாதைகளும் ஏற்படும். மேலும் சேமித்ததை விட அதிகப்படியான பணத்தை மருத்துவருக்கு செலவிட நேரிடும். ஆரோக்கியம் சார்ந்த விவகாரங்களில் சிக்கனம் மற்றும் வீண் பரீட்சார்த்த முயற்சி எப்போதும் எடுக்கக்கூடாது.